தோல்வியில் என்ன சிறப்பான தோல்வி, மோசமான தோல்வி என்ற வினாவுடன் வருகை தந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம். எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விழுந்து தோற்றவர்க்கும், அலாதியாய் முயற்சி செய்து ஏதேனும் காரணம்கொண்டு தோல்வியை முத்தமிட்டவர்க்கும் வேறுபாடு உள்ளது தானே?
தோல்வியடைந்தவுடன் மனச்சோர்வு உண்டாக நேரிடும், உழைப்பு வீணானதை நினைத்து உருக நேரிடும், கண்ட கனவு சிதைந்ததை நினைத்து வருத்தப்படக்கூடும். எண்ணியது எண்ணியவாறு நிகழா தருணம் எண்ணத்தில் ஏதோ சலனம் ஏற்படுத்தும், தங்களை தாங்கள் இழந்தது போல உணரச்செய்யும்.
திருக்குறள்
௬௧௧ (611):
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
தோல்வி உங்களை வாட்டி எடுக்கும். சிந்தித்துப்பார்க்கையில், முயற்சி செய்யாமல் தோற்றவரைக் காட்டிலும் முயற்சி செய்து தோற்றவர் ஒருபடி மேல்.
ஒரு செயலுக்காக அயராது உழைத்து, காலத்தை செலவு செய்து, பல விருப்பங்களை களைந்து, நேரத்தை பெருக்கி, கவனத்தை செலுத்தி, மலையாளவு முயற்சி செய்து இறுதியில் தோல்வியுற்றால், அதிலும் ஏதேனும் கற்றுக்கொண்டு முன்னேற முனைந்தால், அது தோல்வியிலும் சிறந்த தோல்வி தானே?
இறந்த காலத்தை மாற்ற இயலாது என்பதை உணர்ந்து, நிகழ்தலில் என்ன மற்றம் கொண்டுவர இயலும் என்பதை சிந்திக்க முனைதலே தோல்வியை கையாளும் முறை. இக்கணம் தெளிவுற வேண்டியது வெற்றிக்கும் உங்கள் முயற்சிக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு அதனை குறைப்பதற்கான வழிமுறை என்ன என்பதே!
வாழ்க்கை ஒன்றும் ஒரு புள்ளியில் நின்றுவிடப்போவதில்லை. தோல்வியில் வெற்றியடைவதற்கான காரணம் தேடுபவரே வெற்றிக்கான பாதையையும் வழிவகுக்கிறார். தோல்வி என்னும் பாடம் படிப்பவரே வாழ்க்கை எனும் தேர்வில் சிறப்புறுகிறார்கள்.
இன்று தோற்பவர் நாளை வெற்றியடையலாம். வாழ்க்கை என்பதை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நகர்த்திக்கொண்டே செல்கிறோம், அதில் வெற்றி தோல்வியும் ஒரு மேடு பள்ளம். வெற்றியை மட்டும் சுவைத்துக்கொண்டிருந்தால் அலுப்புத்தட்டி விடும். இடையிடையே வரும் தோல்வி புதிய உத்வேகத்தை கொடுத்து, நம்மை நமக்கு உணர்த்தி, நம்மை மேம்படுத்தி, வெற்றியடைவதற்கான வழி வழிவகுக்கும். சிறப்பான வாழ்வை வாரிவழங்கும் அனுபவம் தரும் தோல்வி சிறந்த தோல்வி எனக்கூறுவதில் தவறில்லைதானே?
திருக்குறள்
௬௨௦ (620):
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
புள்ளியை (.) காற்புள்ளியாக்கி (,) தோல்வியில் இருந்து கற்றறிந்த விடையங்களை வெற்றிப்படிக்கட்டுகளாய் மாற்றி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்தும் உங்கள் ஆனூர் பிரதீப்.
Comments
Post a Comment